சென்னை,
விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், இன்று (ஆக. 12) நிகழ உள்ளது. இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காண முடியும் என்றாலும், இந்தியாவின் எந்த பகுதியிலும் முழு சூரிய கிரகணத்தை காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும். முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியே முழு சூரிய கிரகணத்தின் சிறப்பம்சமாகும்.
இந்தியாவில் இருந்து இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியாததற்கு முக்கிய காரணம், கிரகணம் நிகழும் நேரத்தில் இந்தியாவில் இரவு நேரமாக இருப்பதுதான். இந்திய நேரப்படி இரவு சுமார் 11:16 மணிக்கு இது நிகழ்கிறது.
முழு சூரிய கிரகணத்தின் பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ரஷ்யா வழியாக செல்கிறது. குறிப்பாக, வடக்கு ஸ்பெயினில் சூரிய அஸ்தமன நேரத்திற்கு அருகில் முழு கிரகணம் நிகழ இருப்பதால், அடிவானத்தில் மறையும் சூரியனுடன் கிரகணம் இணைந்து காட்சியளிக்கும் அரிய காட்சியை காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரிய நிகழ்வைக் காண உலகம் முழுவதும் இருந்து வானியல் ஆர்வலர்களும், புகைப்படக் கலைஞர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் மற்றும் எரிமலை நிலப்பரப்புகளுக்கு இடையிலும், கிரீன்லாந்தின் ஆர்க்டிக் பனிப் பகுதிகளிலும் கிரகணத்தை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரண்டு வருகின்றனர்.
முழு கிரகணம் தெரியாத பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் காணப்படும். ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வட அமெரிக்காவின் சில பகுதிகள், அலாஸ்கா முதல் வடகிழக்கு அமெரிக்கா, கனடா மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பகுதி கிரகணத்தை காண முடியும்.
அடுத்த ஆண்டும், 2027 ஆகஸ்ட் மாதத்தில் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அந்த கிரகணத்தையும் இந்தியாவில் இருந்து காண முடியாது. வட அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே அதை காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.