உலக செய்திகள்

எரிமலையில் ஏறியபோது மின்னல் தாக்கி சுற்றுலா பயணி பலி

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி.

ரோம்,

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி. இந்நாட்டில் செயல்பாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எடனா உள்ளது. இந்த எரிமலையை ஏற தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கென்னஸ் நகரை சேர்ந்த இளைஞர் சிஸ்லி (வயது 29). இவர் இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சுற்றுலா பயணி பலி

சிஸ்லி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மவுண்ட் எடனா எரிமலை மீது ஏறியுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் சிஸ்லி மீது மின்னல் தாக்கியது. இதில் சிஸ்லி படுகாயமடைந்தார். இது குறித்து உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சிஸ்லியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி இரவு 10 மணியளவில் சிஸ்லி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.