சாண்டியாகோ,
சிலி நாட்டில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் அரோகெனியா மாகாணம் பிட்ருப்கியூன் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இந்த முதியோர் இல்லத்தில் 26 முதியோர் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், இந்த முதியோர் இல்லத்தில் நேற்று முன் தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென முதியோர் இல்லத்தில் உள்ள அனைத்து அறைகளுக்கும் பரவியது. தீ விபத்தால் அதிர்ச்சியடைந்த முதியோர் அனைவரும் அலறியடித்து வெளியேற முற்பட்டனர்.
ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி முதியோர் 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். எஞ்சிய 10 பேர் லேசான காயங்களுடன் உயர் தப்பினர். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.