நியாமி,
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவன பகுதியில், நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூரமான துயர சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த உலகையுமே உறைந்து போக செய்துள்ளது.
மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு லாரி ஒன்றில் தாயகம் திரும்பி கொண்டிருந்த பயணிகள், நைஜர்-அல்ஜீரியா எல்லைக்கு அருகே உள்ள அசமகா பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி பழுதடைந்து பாலைவன மணலுக்குள் சிக்கிக்கொண்டது.
ஓட்டுநரும் பயணிகளும் எவ்வளவு போராடியும் வாகனத்தை சரிசெய்ய முடியாத நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த அத்தியாவசிய உணவு மற்றும் குடிநீரும் தீர்ந்துபோனதால், மாற்று உதவியும் கிடைக்காமல் சகாரா பாலைவனத்தின் கொளுத்தும் கத்தரி வெயிலில் தாகத்தாலும், கடும் வெப்பத்தாலும் துடிதுடித்து பரிதாபமாக 49 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இரண்டு பயணிகள் மட்டும், தங்களின் தாகத்தையும் வெயிலையும் தாங்கிக்கொண்டு சுமார் 50 கிலோமீட்டருக்கும் மேல் பாலைவன மணலில் நடந்து சென்று ஒரு நீர்நிலையை கண்டுபிடித்து உயிரை காத்து கொண்டதுடன், இந்த துயர செய்தியை அதிகாரிகளிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.
தாகத்தோடவே தண்ணிக்கு வழியில்லாமல் சகாரா பாலைவனத்தில் 49 பேர் துடிதுடித்து மரணம். மீட்கப்பட்ட 49 பேரின் உடல்களும் அங்கேயே ஒரு பொது புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நைஜர் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், புலம்பெயர்ந்தோருக்கான இந்த மரண வழித்தடத்தின் கொடூர பின்னணி தற்பொழுது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.