பிரேசிலியா
விமானத்தில் இருந்து, அமேசான் காடுகளின் நடுவே பழங்குடியின கிராமம் ஒன்றை படம் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தென் அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. உலக நாடுகளில் உள்ள மொத்த காடுகளையும் சேர்த்தாலும் அவற்றையெல்லாம் விட அமேசான் காடுகளின் பரப்பளவு அதிகம். இங்குள்ள மரங்களில் இருந்து ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி டன் ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது.
இந்த காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன. 16 ஆயிரம் வகையான உயிரினங்கள் வசிக்கின்றன. பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா, ஈகுவடார் ஆகிய 9 நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கிறது அமேசான் காடுகள். இந்த காடுகள் தற்போது உலகமயமாக்கல் மற்றும் மனித பேராசை காரணமாக அழிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.
இதனை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். காடுகளில் இருந்து மரங்கள் வெட்டி, கடத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அமேசான் மழைக்காடுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மரக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சுரங்கம் மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகின்றன என குற்றச்சாட்டாக கூறி வருவதுடன், அவற்றிற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த காடுகளின் உள்ளே நம்மை போன்ற மனிதர்களால் எளிதில் நுழைந்து விட முடியாது. அந்த அளவுக்கு கொடிய விஷம் கொண்ட பூச்சிகள், ஊர்வன, நீர் வாழ்வன, விலங்குகள் உள்ளிட்டவை மறைந்து இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு வேளை அதனையும் மீறி உள்ளே சென்றால், உயிருடன் திரும்புவது கடினம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விமானம் ஒன்றில் பறந்தபடி நபர் ஒருவர் அமேசான் காட்டின் மைய பகுதியில் பழங்குடியினர் கிராமம் ஒன்றை படம் பிடித்து உள்ளார்.
அதில் சில குடிசைகள் அமைத்து இருப்பது போன்றும் சற்று தொலைவில் காய்ந்த மரங்கள், வெட்டி கிடத்தப்பட்டு கிடக்கும் காட்சிகளும் உள்ளன. வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாத வகையில் இந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறை அமைந்துள்ளது. விமானத்தின் உயரத்தில் இருந்தபடி, அவர்களின் பாதுகாப்புக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.