வாஷிங்டன்,
ஜி-7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நாடுகளின் அதிபர்கள், தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி பொருளாதாரம், வர்த்தகம், வியாபாரம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவர். இந்த மாநாட்டை இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் அடுத்தடுத்து நடத்தும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாநாட்டை ஜூன் 10ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அமெரிக்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாட்டை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும் அந்த மாநாட்டை செப்டம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்வதாகவும் அறிவித்தார். இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜி-7 மாநாட்டை நடத்தும் நாடுகள் ஓரிரு நாடுகளின் தலைவர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடியும்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். அதில் இந்திய-சீன பிரச்னை, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.