கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான போருக்கு பிறகு எண்ணெய் விலை குறையும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஈரானுக்கு எதிரான போருக்கு பிறகு எண்ணெய் விலை குறையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் டி.சி.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28-ம்தேதி அதிரடி தாக்குதல் நடத்தின. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

போர் சூழல் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஈரானுக்கு எதிரான போருக்கு பிறகு எண்ணெய் விலை குறையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமெரிக்காவில் வாழும் ஈரானிய மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தெருக்களில் பலர் நன்றி, நன்றி எனக் கூறி தங்கள் ஆதரவை தெரிவிப்பதை காண முடிகிறது. இதை செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே மக்கள் உணர்கிறார்கள்.

கொஞ்ச காலத்திற்கு எண்ணெய் விலை சற்று அதிகமாக இருக்கும். ஈரானுக்கு எதிரான போருக்கு பின் எண்ணெய் விலை குறையும். முன்பை விட குறையும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.