உலக செய்திகள்

குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் துருக்கி பேரழிவை சந்திக்க நேரிடும் : டிரம்ப் எச்சரிக்கை

குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று துருக்கிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

வாஷிங்டன்,

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. அந்த சூழலை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சிரியாவில் காலூன்றியது. அவர்கள் அரசு படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி நாட்டின் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றினர்.

இதையடுத்து, சிரியாவை சேர்ந்த குர்து இன போராளிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் இறங்கினர். அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில் 2,000 அமெரிக்க வீரர்கள் சிரியா சென்றனர்.

அவர்கள் குர்து இன போராளிகளுடன் இணைந்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டனர். இப்படி குர்து இன போராளிகளுக்கு அமெரிக்க வீரர்கள் பக்கபலமாக இருந்து வந்தனர்.

இந்தநிலையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த மாத இறுதியில் அதிரடியாக அறிவித்தார். இது குர்து இன போராளிகளுக்கு பேரிடியாக அமைந்தது. மேலும் குர்து இன போராளிகள் மீது துருக்கி தாக்குதல் நடத்துவதற்கான சூழல் உருவானது.

அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவு, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஐ.எஸ். அமைப்பு மீண்டும் உயிர்த்தெழ வழிவகுக்கும் என்று குர்து போராளிகள் தலைமையிலான ஐ.எஸ். எதிர்ப்பு கூட்டணி எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், சிரியாவில் குர்து இன போராளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படாது என அறிவித்தார்.

ஆனால் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கிவிட்டதாகவும், அமெரிக்க வீரர்கள் ராணுவ தளவாடங்களுடன் சிரியாவில் இருந்து வெளியேறி வருவதாகவும் அமெரிக்க தலைமையிலான கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் கடந்த 11ந்தேதி தெரிவித்தார். இது குர்து இன போராளிகளை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது.

இந்த நிலையில் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் குர்து இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார ரீதியில் துருக்கி பேரழிவை சந்திக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அதே சமயம் துருக்கியை எரிச்சலூட்டக்கூடாது என குர்து இன போராளிகளை அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியதாவது:

சிரியாவில் குர்து இன போராளிகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அந்நாடு பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும். குர்து இன போராளிகளை நெருங்காமல் பல மைல்களுக்கு அப்பால் இருப்பதே துருக்கிக்கு பாதுகாப்பாக இருக்கும்.

அதே போல் குர்து இன போராளிகளும் துருக்கியை எரிச்சலடைய செய்யாமல் விலகி இருக்க வேண்டும். சிரியாவில் இன்னும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது கடினமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலைத்தூக்கினால் அமெரிக்க படைகள் அவர்களை அழிக்க தவறாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த நிலையில் டிரம்புக்கு பதில் அளிக்கும் விதமாக துருக்கி அதிபர் தயீப் எர்டோகனின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் காலின் தனது டுவிட்டரில் சிரிய குர்து மக்களையும், குர்து இன தீவிரவாதிகளையும் சமமாக ஒப்பிட்டு டிரம்ப் மிகப்பெரிய தவறிழைத்து வருகிறார். நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராகதான் போராடுகிறோம். குர்து இன மக்களுக்கு எதிராக இல்லை என தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு