Image Courtesy: Getty Images 
உலக செய்திகள்

’நரகத்தின் வாசலை’ மூட துர்க்மெனிஸ்தான் முடிவு

நரகத்தின் வாசல் என்று அழைக்கப்படும் டார்வெசாவில் உள்ள எரிவாயு நிலப்பரப்பை மூட துர்மெனிஸ்தான் முடிவு செய்துள்ளது.

அஷ்கபெட்,

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள நாடு துர்க்மெனிஸ்தான். இந்நாட்டின் அஹல் மாகாணம் டார்வெசா என்ற பகுதியில் நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. இயற்கை எரிவாயு கண்டறியும் முயற்சியின் போது நிலப்பரப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதி வட்டவடிவில் மிகப்பெரிய பள்ளம் உருவானது. அதில், மீத்தேன் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த மீத்தேன் வாயு பரவாமல் இருப்பதற்காக 1971 ஆம் ஆண்டு அந்த பள்ளத்தில் தீ வைக்கப்பட்டது. அன்றில் இருந்து தற்போதுவரை அந்த பள்ளத்தில் தொடர்ந்து தீ எரிந்து வருகிறது. ரஷிய ஆராய்ச்சியாளர்களால் திட்டமிட்டு இந்த தீவைக்கப்பட்டதாக தகவல்களும் வெளியாகி வருகின்றன.

அந்த பள்ளத்தில் உள்ள எரிவாயு காரணமாக பல ஆண்டுகளாக தொடர்ந்து தீ எரிந்து வருகிறது. இதனால், அந்த பள்ளத்திற்கு 'நரகத்தின் வாசல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளம் சுற்றுலா தலமாக தற்போது செயல்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த பள்ளத்தை காண வருகை தருகின்றனர்.

இந்நிலையில், நரகத்தின் வாசல் என்று அழைக்கப்பட்டு அந்த தீ எரியும் பள்ளத்தை மூட துர்க்மெனிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வரும் தீயால் அப்பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு குறைந்து வருவதாகவும், இயற்கை எரிவாயு வீணாவதை தடுத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக நரத்தின் வாசலை மூட உள்ளதாகவும் துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்மென்குலி பெர்முர்மெடெவ் தெரிவித்துள்ளார். நகரகத்தின் வாசலை மூட ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. ஆனால், நகரகத்தின் வாசலை மூடுவதில் அதிபர் உறுதியாக உள்ளதால் தற்போது நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நரகத்தின் வாசல் என்று அழைக்கப்படும் தீ எரியும் அந்த பள்ளத்தை மூட துர்க்மெனிஸ்தான் முடிவு செய்துள்ள நிகழ்வு சுற்றுலாவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT