காத்மாண்டு,
காத்மாண்டு பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரிடர்களில் இருந்து நேபாளம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், வடமேற்கு நேபாளத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை உலுக்கியுள்ளன. நேபாள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, வடமேற்கு நேபாளத்தின் முகு மாவட்டத்தில் உள்ள கலாய் பகுதியை மையமாகக் கொண்டு 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
வடமேற்கு நேபாளத்தின் முகு மாவட்டத்தில் உள்ள கலாய் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 1:51 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக முதல் நிலநடுக்கம் பதிவானது. இந்த அதிர்ச்சியைத் தொடர்ந்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த சில மணி நேரங்களிலேயே, அதாவது அதிகாலை 4:28 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் இரண்டாவது நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டது. இந்த 2 நிலநடுக்கங்களின் அதிர்வுகள் முகு மாவட்டத்தின் அண்டை பகுதிகளான டோல்பா மற்றும் ஜும்லா மாவட்டங்களிலும் பரவலாக உணரப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக, இந்த நிலநடுக்கங்களால் வீடுகள் இடிந்ததாகவோ அல்லது பொதுமக்கள் எவருக்கும் காயம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் அளவு மிதமாக இருந்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து அப்பகுதியைக் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட போடே கோசி பெருவெள்ளத்தின் கோர தாண்டவத்தில் இருந்து அந்நாட்டு மக்கள் இன்னும் மீளவில்லை. வெள்ளப் பெருக்கால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு, இந்த திடீர் நிலநடுக்கங்கள் பெரும் பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளன. நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த தொடர் நிலநடுக்கங்களால் வடமேற்கு நேபாள மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.