கராச்சி,
பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 12ந்தேதி பேரணி ஒன்றை நடத்த அக்கட்சி முடிவு செய்தது. இதேபோன்று அங்குள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பேரணி நடத்துவது என முடிவு செய்துள்ளது.
இரு அரசியல் கட்சிகளும் ஹகீம் சயீத் மைதானத்தினை தேர்வு செய்தன. அந்நாட்டில் மிக பெரிய ஒரே அரசியல் கட்சியாக விளங்கும் முத்தைடா குவாமி இயக்கத்தின் ஆதிக்கத்தினை முடிவுக்கு கொண்டு வர இரு கட்சிகளும் முனைப்பில் உள்ளன.
இந்த நிலையில், ஒரே இடத்தில் பேரணியை யார் நடத்துவது என்ற போட்டியில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் சில வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இரு கட்சி அலுவலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. கட்சி தொண்டர்கள் சிலரும் கல்வீச்சில் காயமடைந்தனர். போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் அங்குள்ள வணிக வளாகங்கள், பெட்ரோல் பல்குகள் மற்றும் சந்தைகள் ஆகியவை மூடப்பட்டு உள்ளன.