உலக செய்திகள்

‘ஜான்சென் கோவிட்-19’ தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ‘ஜான்சென் கோவிட்-19’ தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

லண்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், கடுமையான ஊரடங்கு காரணமாக நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த ஆண்டும் மார்ச் மாதம் கொரோனாவின் 2வது அலையால் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்து அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அங்கு தற்போது பைசர், மாடர்னா மற்றும் ஆஸ்ட்ரா செனகா ஆகிய 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் நான்காவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள ஜான்சென் கோவிட்-19 தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது ஒரே தவணையில் செலுத்தக்கூடிய தடுப்பூசியாகும். இங்கிலாந்து அரசு அந்த நிறுவனத்திடம் இருந்து 2 கோடி தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியின் விநியோகம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.