உலக செய்திகள்

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை திடீரென நிறுத்தியது கனடா

அமெரிக்காவின் புதிய 50 சதவீத வரி கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 2,000 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை பாதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை கனடா திடீரென நிறுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த சில புதிய நிபந்தனைகள் நியாயமற்றதாகவும், பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க முடிவு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் கடந்த சில வாரங்களாக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

பேச்சுவார்த்தையில் சில முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இறுதி கட்டத்தில் அமெரிக்கா தனது முன்மொழிவில் சில மாற்றங்களை செய்ததாக கனடா குற்றம் சாட்டியுள்ளது. இந்த மாற்றங்கள் நியாயமற்றவை மட்டுமின்றி, எதிர்கால ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குவதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.இதையடுத்து அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக கார்னி அறிவித்தார். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த கனடா அதிகாரிகள் மீண்டும் நாட்டுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளனர்.மேலும், அமெரிக்கா விதிக்கும் வரிக்கு பதிலடியாக அதே அளவிலான வரியை அமெரிக்க பொருட்களுக்கு விதிக்க கனடா தயாராக இருப்பதாக கார்னி தெரிவித்துள்ளார். அதாவது, அமெரிக்கா விதிக்கும் வரிக்கு இணையான வகையில் கனடாவும் வரி விதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய 50 சதவீத வரி கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 2,000 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை பாதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கனடாவின் அமெரிக்காவுக்கான மொத்த ஏற்றுமதியில் சுமார் 5 சதவீதம் ஆகும்.இந்த வர்த்தக மோதல் நீடித்தால் இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்படுவதுடன், தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு ஏற்கனவே பல்வேறு வரி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.