உலக செய்திகள்

அமெரிக்க பயங்கரவாத தடுப்பு இயக்குனர் ராஜினாமா - டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவு

இஸ்ரேல் மற்றும் சில பண முதலைகளின் அழுத்தத்தின் காரணமாகவே இந்த போர் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து. அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் ஜோசப் கென்ட், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தப் போர் தொடர்பாகப் பதவி விலகிய முதல் மூத்த அதிகாரி இவராவார். இதுகுறித்து டிரம்ப்புக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்த போரைத் மனசாட்சியால் ஆதரிக்க முடியாது என்று கென்ட் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், "ஈரான் நாட்டினால் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாமலே இருந்தது. இஸ்ரேல் மற்றும் சில பண முதலைகளின் அழுத்தத்தின் காரணமாகவே இந்தப் போர் தொடங்கப்பட்டது” அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், "தேவையற்ற போர்களில் அமெரிக்கர்களின் உயிரையும் செல்வத்தையும் வீணடிக்க மாட்டேன் என்ற ஜனாதிபதி டிரம்பின் முன்னாள் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?" என நினைவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனரின் பதவியானது, ஜனாதிபதிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நாட்டுக்கு எதிராக உள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து ஆலோசனை கூறவதே ஆகும். இதனிடையே ஈரான் உச்சபட்ச தலைவர் மொஜ்தபா காமேனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் முன்பாக அமெரிக்கா மண்டியிடும் வரை போர் தொடரும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீதான அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ப்யூரி' ராணுவ நடவடிக்கைகளில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ஜோசப் கென்ட் நேற்று (மார்ச் 17) இரவில் திடீரென ராஜினாமா முடிவை அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் டிரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.