உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா - அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை இறுதி வாக்கெடுப்பு

இந்தியா உட்பட 5 நாடுகள் மீது 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் மசோதா அமெரிக்க நடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.

வாஷிங்டன்,

ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைன்-ரஷியா இடையிலான போரை விரும்பாத அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

கச்சா எண்ணெய்

போர் நடத்த ரஷியாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவை ஆகும். எனவே, ரஷியாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுத்துவிட்டால், ரஷியாவுக்கு போர் நடத்தத் தேவையான நிதி கிடைக்காது என்று டிரம்ப் கணக்கு போட்டார். ரஷியா மீது பொருளாதார தடை விதித்ததுடன், ரஷியாவிடம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிகமான வரி விதித்து வருகிறார்.

100 சதவீதம் இறக்குமதி வரி

அந்த வகையில், ரஷிய எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்க கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் (Procedural Vote) நிறைவேறியது. 'Lindsey O.Graham Sanctioning Russia and Iran Act of 2026' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்குகிறது.

ரஷியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது. ரஷியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 சதவீத வரை வரி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம்

2022 உக்ரைன் போருக்குப் பிறகு, உலக அளவில் ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த மசோதா சட்டமானால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை (17.09.2026) இறுதி ஓட்டெடுப்பு நடக்கிறது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின், இறுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT