வாஷிங்டன்,
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியோடு நிறைவடைய இருந்தது. இந்த சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகொள் விடுத்தார். அதன்படி, ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார். மேலும் இது ஒரு போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவித்தார்.
போர் நிறுத்தம் செய்யப்படும் இந்த இரண்டு வாரங்களுக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதித்துள்ளது. இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்காக வருகிற ஏப்ரல் 10ம் தேதி இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. 109 டாலரில் தொடங்கிய ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் வரை சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.
லண்டன் சந்தையில் வர்த்தகமாகும் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 15.21 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஒரு பேரலுக்கு 91.93 டாலர் வரை குறைந்துள்ளது. அமெரிக்காவில் வர்த்தகமாகும் WTI கச்சா எண்ணெய் விலை 16.40 சதவீதம் குறைந்து 91.21 டாலர் வரை குறைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய் 96.43 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 94.80 டாலருக்கும் வர்த்தகமாகி வருகிறது.