வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியது. இதனால் ஈரானுக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டது.
இதனிடையே, அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
பேச்சுவார்த்தையின் பலனாக கடந்த ஜுன் மாதம் 17ம் தேதி அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அமைதி ஒப்பந்தப்படி இரு நாடுகளும் மோதலை நிரந்தரமாக கைவிட வேண்டும். ஈரான் துறைமுகங்களை முடக்கியுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும்.
ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர வழிவகுக்கும்.
இந்த ஒப்பந்தப்படி, அனைத்து தரப்பும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களில் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் அனைத்தும் இரு தரப்பும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அமைதி ஒப்பந்தத்தை மீறி இருநாடுகளும் தொடர்ந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தன. மேலும், ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை இரு நாடுகளும் இதுவரை முழுமையாக அமல்படுத்தவில்லை.
இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்த காலக்கெடு நிறைவடைந்துள்ளது. அதன்படி, ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களுக்குள் நிபந்தனைகளை இரு நாடுகளும் அமல்படுத்திருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்த காலக்கெடுவுக்குள் இரு நாடுகளும் நிபந்தனைகளை அமல்படுத்தவில்லை. ஒப்பந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதால் அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி கூறி வருகிறார். அதேவேளை, மோதலுக்கு தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது.