உலக செய்திகள்

எச் 1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்து அமெரிக்க கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்திய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தார். அதன்படி வெளிநாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை பரஸ்பரம் உயர்த்துதல், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்துவது, வெளிநாட்டவர்கள் அதிகம் படிக்கும் பல்கலைக்கழகங்களில் நிதிகுறைப்பு போன்ற அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

மேலும் அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கான எச்-1பி விசா கட்டணத்தை ரூ.96 லட்சமாக உயர்த்தினார். இதனால் அமெரிக்காவில் அதிகளவில் தங்கி பணிபுரியபோகும் ஊழியர்கள், என்ஜினீயர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பொதுவான லாட்டரி முறை மாற்றப்பட்டு, உயர் ஊதிய பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு லாட்டரி முறையில் 4 வாய்ப்புகள் என்ற விதி கொண்டு வரப்பட்டது.

கட்டணம் தொடர்பான வழக்குகள் அமெரிக்க கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன. டிரம்பின் இந்த முடிவு, அமெரிக்காவில் பணியாற்ற விரும்பிய நம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் எச் 1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்திய அமெரிக்க ஜனாத்பதி டிரம்ப்பின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், சட்டப்பூர்வமற்ற நடவடிக்கையை அமல்படுத்த அரசுக்கு அதிகாரமில்லை என்றும் மசா சூஸெட்ஸ் கோர்ட்டு அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

இதன்படி அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிய எச் -1 பி விசா பெற ஜனாதிபதி டிரம்ப் விதித்த 96 லட்சம் ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.

இந்நிலையில் டிரம்ப் தனது அதிகாரங்களுக்கு உட்பட்டே செயல்பட்டார் என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT