ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக ,அந்த நாட்டின் துறைமுகங்களை அமெரிக்கா, முற்றுகையிட்டுள்ளது. அமெரிக்காவின் கடல் முற்றுகையை மீறினால் தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஓமன் வளைகுடாவில் பனாமா நாட்டு கொடியுடன் சென்ற கப்பல் மீது அமெரிக்க படைகள் ஏவுகணைகளை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ‘எம்.வி. வேலா நோவா’ என்ற கப்பல் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து சென்றது. இதையடுத்து, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கப்பலின் என்ஜின் அறையை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் கப்பலின் என்ஜின் செயலிழந்ததாகவும், கப்பல் தனது பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகவும்” அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.எனினும், இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதா என்பது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமல்படுத்திய பிறகு இதுவரை 55 வர்த்தகக் கப்பல்களின் பயணத்தை மாற்றியமைத்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும், அமெரிக்காவின் உத்தரவுகளைப் பின்பற்றாத 3 கப்பல்களை செயலிழக்கச் செய்துள்ளதாகவும், 2 கப்பல்களில் அமெரிக்கப் படையினர் ஏறி சோதனை நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் 15-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு நீர்நிலத் தாக்குதல் கப்பலும் அடங்கும்.ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தை அதிகரித்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நடவடிக்கைகளுக்கு மத்தியில், ஓமன் வளைகுடாவில் கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.