சிங்கப்பூர்,
பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.
உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசத்தனர்.
சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப் கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக என்றார். டிரம்ப் மேலும் கூறும் போது, கிம் ஜாங் அன்னுடனான நேரடி பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. நானும், கிம் ஜாங் அன்னும் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண்போம். அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவோம் என்றார்.
இந்த நிலையில், கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 48 நிமிடம் இரு தலைவர்களும் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.