வாஷிங்டன்,
உலகை உலுக்கி வரும் உயிர்கொல்லி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனாலும் இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அங்கு வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக டிரம்ப் நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவருக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை வால்டர் ரீட் தேசிய ராணுவ ஆஸ்பத்திரியில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டே அலுவலக பணிகளை மேற்கொண்டார். கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டிரம்ப், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ மருத்துவமனையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகை புறப்பட்டார். டிரம்ப் டிஸ்சார்ஜ் செயப்பட்டது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழு கூறுகையில், டிரம்புக்கு இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்பாக உள்ளது. ரெம்டெசிவர் மருந்து 5-வது டோஸ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு செல்லும் அளவு அவர் உடல் நலம் தேறிவிட்டார் என தெரிவித்தது.
வரும் 15 ஆம் தேதி ஜோ பிடனுடன் நடைபெற உள்ள விவாதத்தில் டிரம்ப் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.