வாஷிங்டன்,
சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே தடுமாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தற்போது கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,528 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,528 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 760 பேர் பலியாகினர். அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 1,34,729 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 32,42,073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஐந்து நாட்களாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.