பாக்தாத்,
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதல் தற்போது சற்று தணிந்துள்ளது. இந்த மோதலின்போது மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
மேலும், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஈராக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில், ஈராக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேற்று முன் தினம் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வயல்கள், கிடங்குகள், கிணறுகளை குறிவைத்து டிரோன் மூலம் ஈரான் ஆதரவு ஈராக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், ஈராக் மீது அமெரிக்கா, சவுதி அரேபியா இணைந்து இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈராக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்து 7 மாகாணங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.
எண்ணெய் கிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.