உலக செய்திகள்

ஈரானை நோக்கி சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா

மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

வாஷிங்டன்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

இதையடுத்து, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. இதனால், ஈரானின் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிற நாடுகளில் கப்பல்கள் ஈரானுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதேவேளை, மோதலை குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஈரான் நோக்கி சென்ற கப்பல் மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. கச்சா எண்ணெய் எடுத்துச்செல்வதற்காக ஈரான் நோக்கி அந்த கப்பல் சென்றுள்ளது. அந்த கப்பலை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் கப்பலில் இருந்த மாலுமிகள் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.