வார்சா,
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து கூறினாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை நம்ப மறுக்கின்றன. அதே சமயம் உக்ரைனுக்கு நேட்டோ படைகள் ஆதரவு தெரிவித்து வருவதால், அங்கு தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான போலந்துக்கு, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இன்று விமானம் மூலம் சென்றடைந்துள்ளார். பெல்ஜியம், போலந்து மற்றும் லித்துவேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்த சுற்றுப்பயணத்தின் போது 3 நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களை அவர் சந்தித்து பேச உள்ளார்.
இதன்படி பெல்ஜியம் சுற்றுப்பயணத்தை முடித்து தற்போது லாயிட் ஆஸ்டின் போலந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு போலந்து நாட்டின் ஜனாதிபதி அண்ட்ரெஜ் டூடா மற்றூம் பாதுகாப்புத்துறை மந்திரி மரியுஸ் பிளாசாக் ஆகியோரை அவர் சந்தித்து பேச உள்ளார்.