தெக்ரான்,
இந்தியா, சீனா உள்பட அனைத்து நாடுகளும் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4-ம் தேதியுடன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் எந்தஒரு நாட்டிற்கும் சலுகை கிடையாது, தெக்ரானுடன் எந்தஒரு பரிவர்த்தனையை மேற்கொண்டாலும் பொருளாதார தடையை விதிக்க நேரிடும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. ஈராக், சவுதி அரேபியாவிற்கு அடுத்து ஈரானில் இருந்துதான் இந்தியா அதிகமான எண்ணெய் இறக்குமதி செய்கிறது. கடந்த ஏப்ரல் 2017-ல் இருந்து ஜனவரி 2018 வரையில் இந்தியாவிற்கு ஈரான் 18.4 மில்லியன் டன்கள் கச்சா எண்ணெயை சப்ளை செய்துள்ளது.
அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் அரசு ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துவிட்டது. தொடர்ந்து ஈரான் மீது பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
இப்போது ஈரான்னின் முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெய் பிற நாடுகள் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் வகையில் பிற நாடுகளையும் அமெரிக்கா மிரட்டுகிறது.
இந்நிலையில் எண்ணெய் சந்தையில் இருந்து அவ்வளவு எளிதாக எங்களை விலக்கி வைக்க முடியாது என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் முடிவு போன்று எங்களை அவ்வளவு எளிதாக சர்வதேச எண்ணெய் சந்தையிலிருந்து எங்களை விலக்கி வைக்க முடியாது. ஒரு நாளைக்கு சுமார் 2.5 மில்லியன் பேரல் எண்ணெய்யை உலக நாடுகளுக்கு ஈரான் ஏற்றுமதி செய்து வருகிறது. எங்களை சர்வதேச சந்தையிலிருந்து சில மாதங்களில் நீக்கிவிடலாம் என்று நினைப்பது சாத்தியமற்றது, என்று ஈரான் எண்ணெய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.