உலக செய்திகள்

கொரோனாவை தடுக்க ரஷியாவில் தடுப்பூசி - மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்க ஏற்பாடு

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ரஷிய நாட்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்க ஏற்பாடுகள் நிறைவு அடைந்துள்ளன.

தினத்தந்தி

மாஸ்கோ,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. இந்த தொற்றால் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்து விட்டது. இன்னும் கொரோனா வைரசின் ஆதிக்கம் குறையவில்லை.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சைகள் பலன் அளிக்காத நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

தினமும் ஏறத்தாழ 1 லட்சம் பேருக்கு உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிற இந்த கொரோனாவை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசி எப்போது வரும் என்பதுதான் மனித குலத்தின் மாபெரும் எதிர்பார்ப்பு.

இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், ரஷியா என பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை முதலில் சந்தைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று போட்டா போட்டியில் இறங்கி உள்ளன.

இந்த நிலையில் ரஷிய நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசி ஆரம்ப கட்டங்களை கடந்த முன்னேற்றம் கண்டுள்ளது. அடுத்த கட்டமாக அதை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க ரஷியா தயாராகிவிட்டது.

இது குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, வரும் நாட்களில் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும். தன்னார்வலர்களை தனிமைப்படுத்தி, 2 வாரங்கள் முடிவு அடைகிறபோது, அவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி சோதிக்கப்படும் என கூறி உள்ளது.

மேலும், ரஷிய பாதுகாப்பு அமைச்சகமும், தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தொடர்பான கமலேயா ஆராய்ச்சி மையமும் இணைந்து ரஷிய தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நிறைவு அடைகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் தாங்கிக்கொள்ளும் தன்மையை சோதிப்பதுதான் இதன் முக்கிய குறிக்கோள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் நிலையை எட்டி இருப்பது அந்த நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அங்கு கொரோனா பரவல் தீவிரமாக இருக்கிறது. அங்கு இந்த தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 44 ஆயிரத்து 700- ஐ தாண்டி இருப்பதாகவும், பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 200-ஐ கடந்து விட்டதாகவும், 2 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு