உலக செய்திகள்

விசா மோசடி புகார்: அமெரிக்காவில் காக்னிசன்ட்க்கு தற்காலிகத் தடை- ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி

காக்னிசன்ட் மீதான இந்த நடவடிக்கை ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனம் காக்னிசன்ட். இந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான பெர்ம் தாக்கல் நடவடிக்கைகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி வைத்துள்ளது. காக்னிசன்ட் மீதான இந்த நடவடிக்கை ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அடிப்படையில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இதற்கான நடைமுறையில் பெர்ம் (நிரந்தரத் தொழிலாளர் சான்றளிப்பு நடைமுறை) என்பது முக்கியமான கட்டமாகும். இந்த பெர்ம் மூலமே, அமெரிக்க ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறிப்பிட்ட பணியிடத்திற்கு தகுதியான பணியாளர்கள் கிடைக்கிறார்களா என்பது உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்படும்.

விசா மோசடி புகார்

இந்த நிலையில், அமெரிக்க ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் குறைந்த ஊதியப் பிரிவில் காக்னிசண்ட் விசா தாக்கல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில், காக்னிசன்ட் நிறுவனத்தின் பெர்ம் விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. மோசடி, நிதி முறைகேடுகள் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், காக்னிசன்ட் நிறுவனம் மோசடி செய்ததாகவோ அல்லது அமெரிக்க குடியேற்றச் சட்டங்களை மீறியதாகவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. காக்னிசன்ட் நிறுவனத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை நீண்டகாலம் நீடித்தால், நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் கிரீன் கார்டு நடைமுறைகளுக்கு சிக்கல் ஏற்படும். இது அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

SCROLL FOR NEXT