உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான போர்: அமெரிக்காவில் டிரம்பின் செல்வாக்கு சரிவு

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலையும் அதிகரித்தது, அமெரிக்கர்கள் மத்தியில் டிரம்ப் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக கடந்த (2025) ஆண்டு ஜனவரி 20-ந் தேதி டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்றார். அவருடைய ஆட்சி காலத்தில், அரசின் செலவுகளை குறைக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், ஈரான் - இஸ்ரேல் போரில் தலையிட்டு, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால், அமெரிக்காவுக்கு பாதுகாப்பு தளவாடங்களுக்கான செலவு அதிகரித்தது. மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலையும் அதிகரித்தது, அமெரிக்கர்கள் மத்தியில் டிரம்ப் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த வாரம் அதிபர் டிரம்பின் பணி செயல்பாடு, மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்து ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சாஸ் அமைப்புகள் கருத்து கணிப்பு நடத்தின. அப்போது, டிரம்புக்கான செல்வாக்கு 40 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

இந்த நிலையில், நேற்று மீண்டும் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், அவரது செல்வாக்கு 36 சதவீதமாக குறைந்தது. இதற்கு, ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தேவையில்லாத ஒன்று என மக்கள் நினைப்பதே காரணமாக சொல்லப்படுகிறது.

அமெரிக்க அதிபராக 2-வது முறை டிரம்ப் பதவியேற்ற காலத்தில், முதல் முறையாக அவருடைய செல்வாக்கு மக்கள் மத்தியில் கடுமையாக சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.