வாஷிங்டன்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. கடந்த பிப்ரவரி 24ந்தேதி தொடங்கிய போரை நிறுத்தும்படி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. தொடர்ந்து ரஷியாவை வலியுறுத்தியும் வருகின்றன. எனினும், போரை கைவிட ரஷியா மறுத்து விட்டது. இதனால், ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து உள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுக்கவில்லை என்றும் நாங்கள் மேற்கொள்வது, ராணுவ நடவடிக்கை என்றும் ரஷிய அதிபர் புதின் கூறினார். உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைனின் நாசிச நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் ரஷியா தெரிவித்தது.
இந்த போரால், 1 கோடி மக்கள் புலம் பெயர்ந்து அகதிகளாக உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்தும் உள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ரஷிய படையெடுப்பினால், உக்ரைனியர்கள் மற்றும் பலர் உள்பட 1 லட்சம் பேரை சட்டரீதியில் வரவேற்கும் திட்டங்களை அமெரிக்கா அறிவிக்கின்றது.
உக்ரைனில் ரஷிய போரால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில், புதிய நிதி ஒதுக்கீடு முறையில் ரூ.7,000 கோடிக்கும் கூடுதலான தொகையை வருகிற மாதங்களில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம் என்று அறிவிக்கிறோம்.
இந்த நிதியானது உணவு, புகலிடம், தூய்மையான குடிநீர், மருந்து வினியோகம் மற்றும் பிற வடிவங்களிலான உதவிகளை வழங்கும். உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு ஜனநாயக மற்றும் மனித உரிமைகளின் அடிப்படையில் கூடுதலாக ரூ.2,240 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் நாங்கள் அறிவிக்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.