உலக செய்திகள்

உலக நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் மோதல்களுக்கு தீர்வு காண வேண்டும்; பிரதமர் மோடி பேச்சு

மேற்காசியாவில் காணப்படும் சூழல் இந்தியாவுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி

கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக முதலில் மும்பைக்கு சென்ற அவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, மத்திய கிழக்கில் என்னுடைய நாட்டின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக உள்ளது என்றார்.

அந்த பகுதி முழுவதும் பயங்கரவாதம் மற்றும் ஸ்திரமற்ற நிலை நீடிக்க ஈரானே காரணம் என கூறினார். உலகின் மனித உரிமைகள் பதிவுகளில் மிக மோசம் வாய்ந்த நாடுகளில் ஈரான் ஒன்று. அந்நாடு ஒரு போதும் அணு ஆயுதங்களை பெறவோ அல்லது தயாரிக்கவோ அனுமதிக்கவே கூடாது என கூறினார். அவர் நேற்றிரவு டெல்லிக்கு சென்றார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் கனடா பிரதமர் மார்க் கார்னியை இன்று சந்தித்து பேசினார். இதன்பின்னர் இருவரும் கூட்டாக இன்று நிருபர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது பிரதமர் மோடி பேசும்போது, மேற்காசியாவில் காணப்படும் சூழல் இந்தியாவுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற மோதல்களுக்கு தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்துடன் செயல்பட வேண்டும் என இந்தியா எப்போதும் கூறி வருகிறது என்றார். மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டையும் அவர் சுட்டி காட்டினார். பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறை போக்கு போன்ற விசயத்தில் ஒத்த உணர்வை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

ஏனெனில், அவை எங்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் தீவிர சவால்களாக உள்ளன என்றும் கூறினார். உலக அமைதிக்கும் மற்றும் ஸ்திர தன்மைக்காகவும் இதுபோன்ற விவகாரங்களை கையாள நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கூறினார்.