நியூயார்க்,
கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா கவுரவித்துள்ளது.
பெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் இந்த தாக்குதலில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
அதன்பிறகு அவர் பாகிஸ்தான் மட்டும் இன்றி சர்வதேச அளவில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கினார். 2014-ம் ஆண்டு அவருக்கும், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதிக்கான தூதரானார்.
மலாலா யூசுப்சாயின் அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதே போல் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம் (2010), சிரிய உள்நாட்டு போர் துவக்கம் (2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள் (2012), எபோலா வைரஸ் தாக்குதல் (2014), பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பு (2015) ஆகியவற்றை ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.