உலக செய்திகள்

உலகின் மோசமான பயங்கரவாதி கொல்லப்பட்டார் - டொனால்டு டிரம்ப்

அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று டிரம்ப் கூறினார்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவம், நைஜீரிய அரசு படைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியான அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

“எனது வழிகாட்டுதலின்படி, துணிச்சலான அமெரிக்கப் படைகளும் நைஜீரியாவின் ஆயுதப்படைகளும் உலகின் மிகவும் தீவிரமான பயங்கரவாதிகளில் ஒருவரை ஒழிக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன.

உலகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் 2-வது தளபதியான அபு-பிலால் அல்-மினூகி, ஆப்பிரிக்காவில் ஒளிந்துகொள்ளலாம் என்று நினைத்தார். ஆனால், அவரைப் பற்றிய தகவல்களை உளவுத்துறையினர் தொடர்ந்து எங்களிடம் வழங்கி வந்தனர் என்பது அவருக்கு தெரியவில்லை.

அவர் இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ அல்லது அமெரிக்கர்களைக் குறிவைக்கும் தாக்குதல் திட்டங்களுக்கு உதவவோ முடியாது. அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்கிய நைஜீரியா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.” இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.