பாரிஸ்,
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது 183 நாடுகளில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடிய வைரசால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கொத்துகொத்தாக செத்து மடிகின்றனர்.
அந்த வகையில் உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது. அதே போல் பலியானோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
மற்றொரு புறம் இத்தாலி மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை மட்டும் இந்த வைரஸ் பாதிப்பால் ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவே அதிகபட்ச ஒரு நாள் இறப்பாகும்.
எனவே இதனை மோசமான நாளாக இத்தாலி கருதுகிறது. உயிரிழப்பில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
வைரஸ் உருவான சீனாவில் சுமார் 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,300 ஐ கடந்துள்ளது.
அமெரிக்காவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப் வெள்ளிக்கிழமை போர்க்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். ஏற்கனவே சுகாதாரத்துறை திணறிவருகிறது. எனவே அனைத்து தனியார் நிறுவனங்களும் மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் மூலம் அமெரிக்க மக்களின் உயிரை காப்பாற்ற வென்டிலேட்டர்கள் உடனடியாக அதிகளவில் உற்பத்தியாகும் என டிரம்ப் கூறியுள்ளார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, நான் இப்போது சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். ஆனாலும் இந்த வைரசுக்கு எதிரான போரில் நான் தொடர்ந்து காணொலி காட்சி மூலம் அரசை வழிநடத்திச் செல்வேன் என தெரிவித்தார்.