உலக செய்திகள்

ஏமன்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்- பாதுகாப்புப்படையினர் 30 பேர் பலி

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

சனா,

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர் . இந்த தாக்குதலுக்கு சவுதி பதிலடி கொடுத்தது.

30 பேர் பலி

இந்நிலையில், ஏமனில் அரசுப்படையினர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.

ஏமனின் ஹட்ரமொட், மரிப் ஆகிய நகரங்களில் அரசுப்படையினரின் ராணுவ முகாம்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அரசுப்படையினர் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.