தலையங்கம்

பாரம்பரியமும், நவீனமும் கலந்த விவசாயம்

தற்போதுள்ள நிதி ஆதாரங்களின் அடிப்படையில், விவசாயிகளின் உயர்விற்கான திட்டங்கள் முன்னுரிமையின்படி வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளன.

விவசாயத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக கடந்த 2023-ம் ஆண்டு மத்திய அரசு ‘டிரோன் சகோதரி’ என்ற திட்டத்தை அறிவித்தது.

தமிழக சட்டசபையில் வேளாண்மை பட்ஜெட்டை அமைச்சர் வினோத் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்த்தது இடம் பெறவில்லையென்றாலும் சில அறிவிப்புகள் சிறப்பானதாக இருந்தன. பட்ஜெட் உரையின் இறுதியில் அமைச்சர் வினோத், 'முதல் ஆண்டு என்பதால் தற்போதுள்ள நிதி ஆதாரங்களின் அடிப்படையில், விவசாயிகளின் உயர்விற்கான திட்டங்கள் முன்னுரிமையின்படி வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டங்கள் விவசாயிகளின் வாழ்வினை மென்மேலும் முன்னேற்றிட வழிவகுக்கும் என்று உறுதியுடன் நம்புகிறேன். இனி வரும் ஆண்டுகளில் இன்னும் பல திட்டங்கள் தீட்டப்பட்டு பரவலான வேளாண் வளர்ச்சி எய்தப்படும்' என்று கூறினார். ஆக, நிதி ஆதாரம்தான் பெரிய அறிவிப்புகள் இல்லாததற்கு காரணம் என்பதை அமைச்சர் கோடிட்டுக் காட்டிவிட்டார்.

நெல், கரும்புக்கு ஆதார விலை, கூட்டுறவு கடன்கள் முழுமையாக ரத்து போன்ற விவசாயிகள் எதிர்பார்த்த பல அறிவிப்புகள் இல்லை என்பது அவர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். ஒவ்வொரு அறிவிப்புக்கும் முன்பு ஒரு பழமொழியை சொல்லியே தொடங்கினார். பட்ஜெட்டில் 2026-27-ம் ஆண்டில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் குறுவை, சம்பா மற்றும் குளிர்கால பயிர்களில் செயல்படுத்த ரூ.648 கோடியே 55 லட்சம் மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 15 லட்சம் விவசாயிகள் பயனடைவதுடன், 36 லட்சம் ஏக்கர் சாகுபடிப் பரப்பு காப்பீடு செய்யப்படும். மேலும் விருப்பத்தின் பேரில் பதிவு செய்யும் அனைத்து விவசாயிகளையும் இந்தத் திட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதுதான் பிரதான அறிவிப்பாக இருக்கிறது. அரசு அறிவித்துவிட்டது. இனி விவசாயிகளின் கையில்தான் இருக்கிறது.

மழை பொய்த்துப்போகும் காலகட்டத்தில் பயிர் காப்பீடுதான் அவர்களுக்கு கைகொடுக்கும். விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தி கொடுத்து மண் வளம் மற்றும் பயிர்சாகுபடி குறித்த தகவல்களை வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் திட்டம் பலன் அளிப்பதாகும். விவசாயத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக கடந்த 2023-ம் ஆண்டு மத்திய அரசு 'டிரோன் சகோதரி' என்ற திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு டிரோன்கள் மூலம் விதை விதைப்பது. உரம் தூவுவது, பூச்சி மருந்து தெளிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு உர நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் இலவசமாக டிரோன்கள் வழங்கப்பட்டன.

அதன்படி 44 டிரோன்கள் கொடுக்கப்பட்டு அதன்மூலம் பெண்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இது மத்திய அரசாங்கம் கொடுத்தது என்றாலும், தமிழக அரசு சார்பில் 50 சதவீத மானிய விலையில் இதுவரை 40 டிரோன்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய பட்ஜெட்டில் வெற்றி வான்மகள் திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 50 பெண்களுக்கு தலா ஒரு பைலட் மற்றும் இணை பைலட் என்று 2 பெண்களுக்கு பயிற்சி வழங்கி 50 சதவீத மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும் என்று வேளாண்மைத்துறை செயலாளர் பி.சங்கர் தெரிவித்துள்ளார். இதுபோல மேலும் பல முக்கிய அறிவிப்புகள் இருந்தாலும், நிதிப் பற்றாக்குறையால் குறைவான தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டானது பாரம்பரிய விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதில் கவனம் செலுத்துகிறது. இதில் இயற்கை விவசாயம் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான பல்வேறு முன்னெடுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் விவசாயிகளுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றாலும், கிடைத்தது எல்லாமே பயனளிக்கும் திட்டங்கள்.