ஒலிம்பிக் 2024

ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்ற மனு பாக்கர் - பிரதமர் மோடி வாழ்த்து

வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். 8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஒரு வரலாற்றுப் பதக்கம்..! பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக வாழ்த்துக்கள், மானு பாக்கர். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது. நம்பமுடியாத சாதனை.." என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.