நாடாளுமன்ற தேர்தல்-2024

கல்யாணம் எப்போது? கேள்வி கேட்ட தொண்டர்களுக்கு ராகுல் காந்தி ருசிகர பதில்

ரேபரேலி தொகுதியில் தனது வேட்புமனுவுக்கு பிறகு ராகுல் காந்தி கலந்து கொண்ட முதல் பொதுக்கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் தனது வேட்புமனுவுக்கு பிறகு முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி. அப்போது அவர் தனது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியை மேடையின் முன் அழைத்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது,

"நான் தேர்தலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன், எனது சகோதரி இங்கே நேரத்தை செலவிடுகிறார். இதற்காக அவருக்கு ஒரு பெரிய நன்றி" இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூட்டத்தில் திருமணம் எப்போது? என தொண்டர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறு பிரியங்கா காந்தி கூறினார். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடியபோது, தான் 'ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை' என்பதை வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி. "புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்தபோதிலும் திருமணத்தை ஏன் கருத்தில் கொள்ளவில்லை" என்று ஒரு மாணவர் கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், 'தனது பணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், தான் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், திருமணத்திற்கு இடமளிக்கவில்லை' என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT