நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி முதல் இம்மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடந்து முடிந்திருக்கிறது. முக்கோண வடிவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை 2023-ம் ஆண்டு மே 28-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டமைப்பு எப்படிப்பட்டது என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கட்டிடக்கலை பாணிகளை பின்பற்றி முக்கோண வடிவத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் 150 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாக இருக்கும்.
64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் மூன்று மாடிகளை கொண்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டங்களுக்காக தற்போது உள்ளதை விட அதிகமான உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் 384 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மக்களவைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு மூன்று பக்கங்களிலும் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. மேலும் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான நுழைவு வாயில்கள் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா கட்டிடத்தின் அருகில் இருக்கும்.
பசுமை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம், பழைய கட்டிடத்துடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் வரையிலும் மின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு, சூரிய மின் உற்பத்தி மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் அமைப்புகளோடு கட்டமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியானது அதிக நில அதிர்வு மண்டலமாக இருக்கிறது. இதனால் பழைய கட்டிடத்தை ஒபபிடும்போது புதிய பாராளுமன்ற கட்டிடமானது அதிக அளவிலான பூகம்பத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய லோக்சபாவில் மயிலை கருப்பொருளாக கொண்டு சுவர்கள் மற்றும் கூரையில் வரைப்படங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் ராஜ்ய சபையில் தாமரை பூவை கருப்பொருளாக கொண்டு கட்டமைப்புகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் இரு அவைகளிலும் ஒரு மேசையில் இரு எம்.பிக்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து எம்.பிக்களுக்கும் தொடுதிரை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் இதுவரையிலான உள்ள வரலாற்று பயணங்களை ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு புதிய கட்டிடத்தில் அரசியலமைப்பு மண்டபம் உள்ளது.
எம்.பிக்களுக்கு ஓய்வறை, சாப்பாட்டு அறை மற்றும் நூலக வசதிகளும் இந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டிடத்தில் மூன்று கமிட்டி அறையில் இருந்த நிலையில் புதிய கட்டிடத்தில் ஆறு கமிட்டி அறைகள் உள்ளன. மேலும் கவுன்சில் உள்ள மந்திரிகளுக்காக 92 அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திற்கான கட்டுமானப் பொருட்கள் நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. தோல்பூரில் உள்ள சர்மதுராவில் இருந்து மணற்கல் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லகா கிராமத்தில் இருந்து கிரானைட், நாக்பூரில் இருந்து அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் மரம்
வரழைக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த கைவினைஞர்கள் மர கட்டிடக்கலை வடிவமைப்பிற்கு தலைமை தாங்கினர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பதோஹி நெசவாளர்கள் பாரம்பரியமான கையால் கட்டப்பட்ட கம்பளங்களை உருவாக்கியுள்ளனர்.
16 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை, 1993-ம் ஆண்டு பழைய பாராளுமன்றத்தில் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டது. பத்மபூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி சுதாரால் செய்யப்பட்ட இந்த சிலை, தற்போது லோக்சபா சபாநாயகர் பயன்படுத்தும் நுழைவாயிலுக்கு அருகில் பழைய கட்டிடத்தை பார்த்தவாறு நிறுவப்பட்டுள்ளது.
தேசிய சின்னமான அசோக தூண் 9,500 கிலோ எடையும், 6.5 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுவாயிலில் உள்ள அசோக சக்கரம் மற்றும் சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தைகள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப ஒப்பந்தம் டாடா நிறுவனத்திற்கு ரூ.861.9 கோடிக்கு கொடுக்கப்பட்டது, ஆனால் திட்டம் தொடங்கும்போது ரூ.971 கோடியாக செலவு ஆனது. அதன்பிறகும் செலவு கூடியதால் இறுதியாக 1200 கோடி ரூபாய் செலவானதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வண்ணமாக அனைத்து பதிவுகள், சபை நடவடிக்கைகள், கேள்விகள் போன்ற அனைத்தும் காகிதத்திற்கு மாற்றாக டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. இதனால் அவையில் டேப்லெட்டுகள் மற்றும் ஐபேடுகள் பெறுகின்றன.
இங்குள்ள கேலரியில் இந்தியாவில் உள்ள மண்பாண்ட பொருட்கள் மற்றும் ஜவுளிகள் போன்ற தனித்துவமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நினைவுச்சின்னங்கள் தவிர, யோகா ஆசனங்களும் அடங்கும்.
ஊடகவியலாளர்களுக்கு பிரத்யேகமான 530 இருக்கைகள் உட்பட சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு இருக்கையில் இருந்து பொதுமக்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தெளிவாக காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த புதிய கட்டிடம் மேம்படுத்தப்பட்ட தீ பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கொண்டிருக்கிறது.