கிரிக்கெட்

3வது ஒருநாள் போட்டி - அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

டுப்லின்,

3வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.

ஒருநாள் தொடர்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 7ம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் முன்னிலை பெற்றது.

டாஸ்

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. பெல்பாஸ்ட் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

206 ரன்களுக்கு ஆல் அவுட்

இதையடுத்து, களமிறங்கிய அயர்லாந்து வீரர்கள் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அயர்லாந்து 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ரன்கள் எடுத்தது.

207 ரன்கள் இலக்கு

இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், ரஹ்மானுல்லா குர்பாஸ் சிறப்பாக விளையாடி 71 ரன்கள் எடுத்தார்.

44.5 ஓவரில் வெற்றி

பின்னர் பொறுப்புடன் விளையாடிய ரஷித் கான் 43 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி அயர்லாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.