ஆமதாபாத்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் (12), கே.எல். ராகுல் (14) எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் கோலி (1) ரன்னில் வெளியேறியதால் அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில், அறிமுக போட்டியில் விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், இங்கிலாந்து பவுலர் அடில் ரஷீத் வீசிய பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். 28 பந்துகளில் அவர் அரை சதம் எடுத்துள்ளார். எனினும், 57 (31 பந்துகள் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள்) ரன்களில் சூர்ய குமார் யாதவ், மலானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்பின்னர் ரிஷாப் பண்ட் (30) மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் (37) அடித்து ஆடி ரன் விகிதங்களை அதிகரித்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா (11), வாஷிங்டன் சுந்தர் (4) ரன்களில் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ராய்-ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இதில் ஜாஸ் பட்லர் 9 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்ததையடுத்து, அடுத்து விக்கெட்டுக்கு டேவிட் மலான் களமிறங்கினார். இந்த ஜோடி சற்று நிதானமாக ஆடிய நிலையில், ராகுல் சாஹர் வீசிய 8 வது ஓவரில் மலான்(14) பவுல்ட் ஆனார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா வீசிய 9வது ஓவரில் ஜாசன் ராய்(40) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இதற்கடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ-பென் ஸ்டோக்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. அரை சதத்தை நெருங்கிய பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஜானி பேர்ஸ்டோ 25 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் நீண்ட நேரம் நிலைத்து நிற்காததால் இறுதி ஓவர்களில் நிர்ணயித்த இலக்கை இங்கிலாந்து அணியால் எட்டமுடியவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று சமநிலையில் உள்ளன.