கிரிக்கெட்

4-வது இளம் இந்திய வீரர்... டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய சுப்மன் கில்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கொழும்பு,

கொழும்பில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

3,000 ரன்கள்

முதல் டெஸ்ட் போட்டி முடிவில் 3,000 ரன்களை எட்ட கில்லுக்கு வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், தற்போது அந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

26 ஆண்டுகள் 349 நாட்களில் இந்த சாதனையை படைத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த 4-வது இளம் இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 23 ஆண்டுகள் 228 நாட்களில் 3,000 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.

கேப்டனாகவும் அபாரம்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கேப்டனாக இதுவரை 11 போட்டிகளில் 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கில், 74.06 என்ற சராசரியுடன் 1,111 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 269 ரன்கள் ஆகும்.

முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களும் கே.எல். ராகுல் 18 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் 3 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரிடையர் ஹர்ட் ஆனார்.

தற்போது தேவ்தத் படிக்கல் - ஜடேஜா ஜோடி களத்தில் உள்ளது.

இந்திய அணி

ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவதத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல், சாரான்ஷ் ஜெயின், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இலங்கை அணி

லஹிரு உதார, கமில் மிஷார, பசிந்து சூரியபண்டார, கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), கேஷர நுவந்தா, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமாரா, அசிதா பெர்னாண்டோ.