கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. #INDVsENG

லண்டன்,

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.

464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஆனால் ஸ்கோர் 120 ரன்னாக இருக்கும்போது ரகானே 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஹாரி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

6-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். லோகேஷ் ராகுல் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் இளம் வீரரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடில் ரஷித் பந்தை சிக்சருக்கு தூக்கி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இவரது சதத்தில் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. இதில் லோகேஷ் ராகுல் 149 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரிஷப் பந்த் 114 ரன்களிலும் வெளியேறினர்.

அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் சரியாக சோபிக்காத நிலையில் இந்திய அணி 94.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 149 ரன்களும், ரிஷப் பந்த் 114 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும், குர்ரன் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது.

மேலும் இந்திய அணிக்கு எதிராக 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், தொடரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

SCROLL FOR NEXT