கிரிக்கெட்

அபிஷேக் அதிரடி: ஐதராபாத் அணி 219 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நியூ சண்டிகாரில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் ஐதராபாத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். அபிஷேக் சர்மா , டிராவிஸ் ஹெட் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். ஐதராபாத் 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்தார். டிராவிஸ் ஹெட் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அபிஷேக் சர்மா 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இஷான் கிஷன் 27 ரன்களும் , கிளாசன் 39 ரன்களும் எடுத்தனர்.இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.