கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டி: வசதிகள் போதாததால் அதிருப்தி... ‘பி’ அணியை அனுப்புகிறதா இந்தியா?

ஜப்பானில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளன.

மும்பை,

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் அணிகள் அதிருப்தி

ஜப்பானில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளன.

இதில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள மைதானம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், முறையான உடைமாற்றும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பி’ அணியை அனுப்புமா இந்தியா?

இதன் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்தியாவின் முதன்மை அணிக்கு பதிலாக ‘பி’ அணியை அனுப்ப பிசிசிஐ பரிசீலித்து வருவதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இந்த தகவலை பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உள்கட்டமைப்பு தொடர்பான கவலைகள் உண்மையாக இருக்கலாம். ஆனால், இந்தியா தனது முதன்மை அணியையே ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பும். ‘பி’ அணியை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

தங்கத்தை தக்கவைக்குமா இந்தியா?

கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி, இந்த முறை தங்கப் பதக்கத்தை தக்கவைக்கும் நோக்கில் களமிறக்குகிறது.