கிரிக்கெட்

வைடாக வந்த பந்து... ஒரே உதை; கிரிக்கெட்டில் கால்பந்து விளையாடிய பண்ட் - வைரலான வீடியோ

20 பந்துகள் வரை ரன் எதுவும் எடுக்காத பண்ட், பின்னர் 3 சிக்சர்களை பறக்க விட்டார்.

கொழும்பு

கிரிக்கெட் போட்டியின்போது, வைட் பாலை காலால் உதைத்து ரிஷப் பண்ட் கால்பந்து விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 15-ந்தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் வருகிற 23-ந்தேதியும் தொடங்குகிறது.

பயிற்சி ஆட்டம்

அதற்கு தயாராகும் வகையில், இலங்கை கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. இந்த பயிற்சி ஆட்டம் கொழும்புவில் உள்ள என்.சி.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில், 3-வது நாள் போட்டியின்போது, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான திலும் சதீரா ஒரே வைட் பாலாக வீசினார். இதனால், ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அடிக்க முடியாதபடி பந்து வைடாக வீசப்பட்டது.

வீடியோ வைரல்

ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த பண்ட், லெக் ஸ்டம்ப் நோக்கி வைடாக வந்த பந்து ஒன்றை, தன்னுடைய காலால் உதைத்து தொலைவில் போகும்படி செய்து விட்டார். பின்னர் சதீராவை பார்த்து பண்ட் லேசாக புன்முறுவலும் செய்துள்ளார். இந்த நகைச்சுவையூட்டும் காட்சிகள் வீடியோவாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

போட்டியில், 20 பந்துகள் வரை ரன் எதுவும் எடுக்காத பண்ட், பின்னர் 3 சிக்சர்களை பறக்க விட்டு பந்து வீச்சாளருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். போட்டியின் முடிவில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.