image courtesy; AFP  
கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட வங்காளதேச ஆல் - ரவுண்டருக்கு 2 ஆண்டுகள் தடை...!

2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது.

துபாய்,

ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதற்காக வங்கதேச ஆல் ரவுண்டர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாட 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளார்.

அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது. ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சி (மேட்ச் பிக்சிங்), ரகசிய தகவல் பரிமாற்றம், சூதாட்டம் நோக்கில் சந்தேக நபர்கள் அணுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான இந்தியாவின் கிரிஷன் குமார் சவுத்ரி, பராக் சங்வி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ரிஸ்வான் ஜாவித், சலியா சமன், பேட்டிங் பயிற்சியாளர் அசார் ஜாய்தி, உதவி பயிற்சியாளர் சன்னி தில்லான், அணி மேலாளர் ஷதப் அகமத் மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் நசிர் ஹூசைன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் 32 வயதான நசிர் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் சந்தேகத்துக்குரிய நபரிடம் இருந்து பெற்ற விலை உயர்ந்த பரிசுப்பொருள் விவரத்தை மறைத்து ஊழல் தடுப்பு விதியை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) குற்றம் சுமத்தியது. அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், நசீர் ஹூசைன் இரண்டு வருடங்கள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

ஹொசைன் 2011 மற்றும் 2018 க்கு இடையில் வங்காளதேசத்திற்காக 115 போட்டிகளில் விளையாடி, 2,695 ரன்கள் மற்றும் 39 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இவரது தடைக்காலம் 2025 -ம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னர் அவர் ஓய்வு பெறாவிட்டால் அதன்பின் கிரிக்கெட்டை மீண்டும் தொடர முடியும்.

SCROLL FOR NEXT