Image Courtesy : AFP  
கிரிக்கெட்

மேத்யூஸ், டி சில்வா அரைசதம் : 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 282 / 5

வங்காளதேச அணியை விட இலங்கை அணி 83 ரன்கள் பின்தங்கியுள்ளது.

மிர்புர்,

இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 24 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் விக்கெட் கீப்பர் லிட்டான் தாசும் (135 ரன்), முஷ்பிகுர் ரஹிமும் (115 ரன்) சதம் அடித்து அணியை காப்பாற்றினர். தொடக்க நாளில் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 365 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. திமுத் கருணாரத்னே 80 ரன்கள் எடுத்த நிலையில் சாகிப் அல் ஹசன் பந்தில் போல்டானார். அவரை தொடர்ந்து மெண்டிஸ் 11 ரன்களில் வெளியேற ராஜிதா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

பின்னர் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் டி சில்வா ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அற்புதமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டி சில்வா அவுட்டானார். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 58 ரன்களிலும் சந்திமால் 10 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். வங்காளதேச அணியை விட இலங்கை அணி 83 ரன்கள் பின்தங்கி இருக்கும் நிலையில் 4-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT