பார்படோஸ்,
கரீபியன் பிரீமியர் லீக் குவாலிபையர் சுற்றில் கயானாவை வீழ்த்தி ஜமைக்கா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன
கரீபியன் பிரீமியர் லீக் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றான குவாலிபையர் சுற்றுக்கு கயானா அமேசான் வாரியர்ஸ், அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கயானாவை வீழ்த்தி அன்டிகுவா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 2வது குவாலிபையர் ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஜமைக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கயானா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஷிம்ரன் ஹெட்மயர் அதிகபட்சமாக 45 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜமைக்கா 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கயானாவை வீழ்த்தி கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்குல் ஜமைக்கா நுழைந்தது. சிறப்பாக ஆடிய ஜமைக்கா வீரர் பவுல் 17 பந்துகளில் 40 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதன் மூலம் நாளை மறுதினம் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்சை ஜமைக்கா கிங்ஸ்மென் அணி எதிர்கொள்ள உள்ளது.