சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதியது. இதில் 'டாஸ்' ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. 210 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னைக்கு எதிராக பஞ்சாப் விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இதுவாகும். சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். இந்த போட்டியில் பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியிலும் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இம்முறை மீண்டும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சேப்பாக்கத்தில் தனது ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் “சென்னையில் மீண்டும் ஒரு வெற்றி” என்று பதிவு செய்துள்ளது. அதில், நடிகர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்பட காட்சியை பயன்படுத்தி பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.